பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு நீக்க வேண்டுமென பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கோரிக்கை
அ.வரதராஜப்பெருமாள்

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கோரப்பிடியிலும், பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் பிடியிலும் சிக்கி பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இன்னல்களுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியது வரலாறாகும். மிக நீண்ட காலம் இவ்வாறு உடல் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதுவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அந்த வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி விடுத்திருந்த அறிவிப்பு தமிழ் முஸ்லிம் மலையக மக்களை மகிழப்படுத்தும் செய்தியாய் அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதனை வரவேற்றிருந்தனர். இதே போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்குவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதுவே, அனைத்து இலங்கை மக்களினதும் எதிர்பார்க்கையாகும். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நியாயமான உணர்வுகளை, ஜனநாயகரீதியான எழுச்சியை அடக்கிவிட முடியாது என்பது எமது நம்பிக்கை, இதுவே நம் எல்லோரதும் அனுபவமாகும்.அழுத்தங்களுக்கு மத்தியிலும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக துணிச்சலாக தீர்மானம் எடுத்த ஜனாதிபதி அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கி நாட்டில் ஜனநாயக சூழல் மேலும் விரிவடையவும், சாதாரண சட்டங்கள் மூலம் நீதியான சூழல் மேம்படுத்தப்படுவதற்கும் வழிவகைசெய்ய வேண்டும்.அத்துடன் தமிழ் மக்களின் அபிலாiஷகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியற் தீர்வினை விரைவில் அடைவதற்கு உரிய உருப்படியான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுமாயின் புதிய முறையிலோ புதிய வடிவத்திலோ மீண்டும், மீண்டும் அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி அமுல் நடாத்த வேண்டிய தேவை எதிர்காலத்தில் அரசுக்கு ஏற்பட மாட்டாது என்பதையும் இத்தருணத்தில் கூறிவைக்க விரும்புகிறாம். .
அ.வரதராஜப்பெருமாள்
02-09-2011